‘டெனெட்’ படத்தைத் தொடர்ந்து ‘கான்ஜூரிங்- 3’ திரைப்படத்தின் வெளியீட்டையும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன.
பெரும்பாலான நாடுகளில் கரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகள் திறக்கப்படுவதும் தள்ளிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ‘கான்ஜூரிங்- 3’ திரைப்படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைத்துள்ளது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாவதாகத் திட்டமிடப்பட்ட ‘கான்ஜூரிங் - தி டெவில் மேட் மீ டூ இட்’ திரைப்படம் கரோனா அச்சுறுத்தலால் 2021 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திரையரங்குகள் பாதுகாப்பான சூழலுடன் திறக்கப்பட்ட பிறகே எங்கள் படங்கள் வெளியாவதை நாங்கள் உறுதி செய்வோம்.
பார்வையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக கரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், எங்கள் படங்களில் வெளியீட்டுத் தேதியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ திரைப்படத்தின் வெளியீட்டையும் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.