அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதர மாநிலங்களில் கரோனா பரவல் குறையவில்லை. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அவர்களே தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, தற்போது அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் வெளியிட்ட பதிவில், "சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டுத் தனிமையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்" என்று தெரிவித்துள்ளார்.