ரசிகைகளின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை!

By மகராசன் மோகன்

விஜய் தொலைக்காட்சி 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை கதாபாத்திரத்துக்குப் பார்வையாளர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்புக் கூடிக்கொண்டே போகிறது. கடந்த 3 மாதங்களாக புதிய எபிஸோட்ஸ் இல்லையென்றாலும் சமூக வலைதளங்களில் முல்லையின் புகழ் பாடிய வண்ணம் இருக்கின்றனர்.

அதற்கேற்றாற்போல முல்லை கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சித்ராவும் தனது ரசிகைகளுக்கு அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த மாதத்தில் ஜானகி என்ற ஒரு ரசிகையின் பிறந்தநாளை விமர்சியை ஆக கொண்டாடியவர் சமீபத்திய 2 நாட்களுக்கு முன்பு சென்னை, மடிப்பாக்கத்தில் வசிக்கும் ஷபிதா என்ற இல்லத்தரசியின் வீட்டுக்கே சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய எபிஸோட்ஸ் சில மாதங்கள் இல்லாமல் இருந்ததால் முல்லை கதாபாத்திரம் பலரையும் ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால்தான் இந்த லாக் டவுன் நேரத்தில் சில சர்ப்ரைஸ் சந்திப்புகளை அனுபவித்தேன். கடந்த ஜூன் மாதத்தில் ஜானகி என்ற ரசிகையின் பிறந்தநாள் அன்று அவரை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை, அண்ணாநகருக்கு நேரில் வரவழைத்து ஒரு பெரிய கொண்டாட்டமாக கொண்டாடித் தீர்த்தோம். அவரை அவருடைய ஏரியாவில் இப்போது 'முல்லை அடிக்டிட்' என்று சொன்னால் தெரிகிறது.

ரசிகை ஜானகியுடன் சித்ரா

அடுத்த ரசிகையின் செயல்தான் என்னை இப்போதும் சிலிர்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. இவங்க பெயர் ஷபிதா. சென்னை, மடிப்பாக்கம்ல இருக்காங்க. கணவர், 2 குழந்தைங்கன்னு அழகான குடும்பம். கடந்த 3 மாதம் முல்லையோட புதிய எபிஸோட்ஸ் இல்லைன்னதும் அவங்களுக்கு பயங்கர ஏக்கம்.

அதுவும் என் பிறந்தநாள் அன்னைக்கு இந்த லாக் டவுன் நேரத்தில் தெரு முழுக்க எல்லோருக்கும் சாப்பாடு சமைத்து பரிமாறியிருக்காங்க. மிஸ் யூ முல்லை என்ற பெயரில் அகல் விளக்கு வைப்பது, கோலம் போடுவது என இவங்க குடும்பத்தோட பாசத்துக்கு அளவே இல்லாமல் போச்சு. அந்த குடும்பத்தை நேர்ல சந்தித்தே ஆகணும்னு சர்ப்ரைஸா அவங்க பர்த்டே அன்னைக்கு வீட்டுக்கே போயிட்டோம்.

நான் போன நேரத்துல மிக்ஸியில சட்னி அரைச்சிக்கிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் அந்த மிக்ஸி ஜார் எல்லாம் பறக்க ஓடி வந்து அப்படியே கட்டிப்பிடித்தவங்க தான். 15 நிமிஷம் விடவே இல்லை. ஒரே அழுகை வேற. அப்பறம் அவங்களுக்கு கேக் எல்லாம் வெட்டி பர்த்டே கொண்டாடினோம்.

இந்த அளவுக்கு பலரையும் முல்லை ஈர்த்திருக்கிறாள்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு. இதோ 2 வாரமாக படப்பிடிப்புக்கு போய்க்கிட்டிருக்கேன். வர்ற ஜூலை 27ம் தேதியில் இருந்து முல்லையை மீண்டும் புதிய அத்தியாயங்களுடன் பார்க்கலாம். யாரும் கவலைப்படாதீங்க!'' என்கிறார், பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' சித்ரா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE