ஜூராசிக் வேர்ல்டு திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுவனம் மீண்டும் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாக தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக இப்படத்தின் இன்னொரு குழு இங்கிலாந்து செல்லவுள்ளது. இது குறித்து நடிகர் ஜெஃப் கோல்ட்ப்ளம் கூறியுள்ளதாவது:
இன்னும் ஓரிரு வாரங்களில் நாங்கள் இங்கிலாந்து செல்லவுள்ளோம். அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஜூராசிக் வேர்ல்டு படப்பிடிப்பில் நாங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கப்போகிறோம்.
அவர்கள் எங்களிடம் படத்தின் 109 பக்க கதையை கொடுத்துள்ளனர். எங்களின் பாதுகாப்புக்காக ஏராளாமான பணத்தையும், அர்ப்பணிப்பையும் இதில் முதலீடு செய்துள்ளனர். படக்குழுவினர் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டு, தனித்தனி அறைகளில் தங்கவைக்கப் படுகின்றனர்.
இது ஒரு ஆபத்தான காலகட்டம் என்பதை நாங்கள் அறிவோம். எங்களோடு சாம் நீல், க்றிஸ் ப்ராட், லாரா டெர்ன் ஆகியோரும் வரவுள்ளனர். அதோடு அங்கே சில டைனோசர்களும் இருக்கப் போகிறது.
இவ்வாறு ஜெஃப் கோல்ட்ப்ளம் கூறியுள்ளார்.