'துருவ நட்சத்திரம்' பணிகளில் தீவிரம்: கெளதம் மேனன் தகவல்

By செய்திப்பிரிவு

'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு 'ஜோஷ்வா: இமை போல் காக்க' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் கெளதம் மேனன். அதில் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டார். வெளிநாட்டில் மட்டும் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.

முன்னதாக, விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகளும் மீதமுள்ளன. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படத்தில் சிம்ரன், ராதிகா சரத்குமார், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் நிலை என்ன, எப்போது வெளியீடு என்பது இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

இதனிடையே டிஸ்கவரி சேனல் ஒளிபரப்பாகவுள்ள கோவிட்-19 குறித்த ஆவணப்படத்துக்கு கெளதம் மேனன் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் 'ஜோஷ்வா' மற்றும் 'துருவ நட்சத்திரம்' தொடர்பாக கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்காகக் காத்திருக்கிறோம். 'ஜோஷ்வா' படத்தில் சண்டை உள்ளிட்ட இதர காட்சிகளுக்காக இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. அடுத்ததாக, தற்போது எடிட்டிங் பணியில் இருக்கும் 'துருவ நட்சத்திரம்'. விக்ரம் சார் இல்லாத 7 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் ஒரு நிகழ்வாக இப்படம் இருக்கும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE