உள்துறை அமைச்சருக்கு சுஷாந்த் சிங்கின் காதலி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக அவரின் காதலி உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுஷாந்த் சிங் மரணமடைந்து ஒரு மாத காலம் தாண்டிவிட்டது. இதையொட்டி பலரும் மீண்டும் சுஷாந்த் சிங் குறித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரிஹா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மதிப்புக்குரிய அமித் ஷாவுக்கு... நான் சுஷாந்தின் காதலி ரிஹா. அவரின் திடீர் மறைவு நிகழ்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அரசின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் நீதி வேண்டி, சிபிஐ விசாரணைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று நான் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முடிவை எடுக்க சுஷாந்தைத் தூண்டியது எது என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்".

இவ்வாறு ரிஹா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE