'சித்தி 2' சீரியலில் பொன்வண்ணனுக்குப் பதில் நிழல்கள் ரவி: மற்ற சில கதாபாத்திரங்களிலும் மாற்றம்! 

By மகராசன் மோகன்

ராதிகா முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் 'சித்தி 2' சீரியலில் பொன்வண்ணன், ஸ்ரீஷா உள்ளிட்ட 4 முக்கியக் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பதிலாக புதிய நடிகர்கள் பட்டாளத்துடன் விரைவில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் ராதிகா அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டரிலும், ''சில நடிகர்கள் மாற்றங்களுடன் விரைவில் 'சித்தி 2' வருகிறது!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் தடைப்பட்டிருந்த சீரியல் ஷூட்டிங் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் பல நடிகர், நடிகைகள் ஷூட்டிங் வருவதில் தயக்கம் காட்டினர். இந்த சூழலை சீரியல் தயாரிப்பு நிறுவனம் புரிந்துகொண்டு பல கதாபாத்திரங்களை மாற்றம் செய்யத் தொடங்கியது. அதில் ஒரு அங்கமாக 'சித்தி 2' சீரியலிலும் மாறுதல் நடந்துள்ளது.

நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி

சீரியலில் பொன்வண்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். ஷில்பா நடித்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார். ராதிகாவின் மருமகளாக நடித்த நிகிலாவுக்குப் பதில் இனி வரும் அத்தியாயங்களில் காயத்ரி நடிக்கிறார். இதுபோக ஸ்ரீஷா உள்ளிட்ட இன்னும் சில கதாபாத்திரங்களிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

'சித்தி 2' சீரியல் ஷூட்டிங் கடந்த ஒரு வாரமாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஜூலை 16) முதல் ராதிகா சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்தப் புதிய மாற்றங்களுடன் விரைவில் சன் தொலைக்காட்சியில் 'சித்தி 2' சீரியல் வர உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE