கர்நாடகாவில் 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த நடிகர் கிச்சா சுதீப்

தனது அறக்கட்டளை மூலமாக நான்கு அரசுப் பள்ளிகளை நடிகர் கிச்சா சுதீப் தத்தெடுத்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நிலவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல திரை நட்சத்திரங்கள், தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு உபகரணங்களில் ஆரம்பித்து உணவுப் பொட்டலங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் எனப் பல வகையான பொருட்கள் தானமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கன்னடத் திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் ('நான் ஈ', 'புலி') கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் நான்கு பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளார். டிஜிட்டல் வழி கல்விக்காக இந்தப் பள்ளிகளில் சுதீப், கணினிகளை நிறுவியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பள்ளியின் வசதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் சுதீப் ஒரு தன்னார்வலர் குழுவை நியமித்துள்ளார்.

கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE