இந்தியில் ரீமேக்காகும் 'ஹிட்': நாயகனாக ராஜ்குமார் ராவ் ஒப்பந்தம்

தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் வெளியான 'ஹிட்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

நானி மற்றும் பிரஷாந்தி ஆகியோர் தயாரிப்பில், சைலேஷ் கோலனு இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தெலுங்குப் படம் 'ஹிட்: தி ஃபர்ஸ்ட் கேஸ்'. விஷ்வக் சென், ருஹானி சர்மா ஆகியோர் இதில் நடித்திருந்தனர். காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றிய காவல்துறையின் விசாரணையே இந்தப் படம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்தப் படம் பெற்றது. தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் பலரால் பாராட்டப்பட்டது.

தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்குப் பதிப்பை இயக்கிய சைலேஷே இந்தியிலும் இயக்குகிறார்.

'' 'ஹிட்' படத்தின் முதல் வழக்கு, ஒரு காவல்துறை அதிகாரி, தன் கடந்த காலத்துடனும், நிகழ்காலத்துடனும் தொடர்ந்து நடத்திய போராட்டத்தைப் பற்றிப் பேசியது. அந்தக் கதாபாத்திரம் பாதிக்கப்பட்டதுபோல இருக்க வேண்டும் என்பதால் அந்த இயல்பைத் திரையில் கொண்டு வரும் நடிகரை நான் தேடினேன்.

அதே நேரமும் அந்தக் கதாபாத்திரத்துக்காக ரசிகர்களும் கவலைப் பட வேண்டும். நடிகர் ராஜ்குமார் அப்படியான ஒரு நடிப்பைத் தருவார் என்று நினைத்தேன். நீண்ட காலமாக அவரது படங்களை நான் பார்த்து வருகிறேன். அவர் ஒரு அட்டகாசமான நடிகர்" என்று சைலேஷ் கூறியுள்ளார்.

மேலும் 'ஹிட்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் திட்டமும் உள்ளதாக சைலேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் ராவ் கூறுகையில், "படம் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்தது. விறுவிறுப்பான கதை. இன்றைய சூழலுக்கு ஒத்துப்போகும் கதை. இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரங்களைத்தான் எப்போதும் தேடுவேன். இந்தப் படம் அப்படி ஒரு வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

'ஜெர்ஸி' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் தில் ராஜு தான், 'ஹிட்' ரீமேக்கையும் தயாரிக்கிறார். உடன் குல்தீப் ரத்தோர் இணைந்து தயாரிக்கிறார். அடுத்த வருடம் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE