புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவம்: புத்தகமாக எழுதும் நடிகர் சோனு சூட்

கோவிட்-19 நெருக்கடி சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய அனுபவத்தைப் புத்தகமாக எழுதவுள்ளார் நடிகர் சோனு சூட்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர். ஒரு தரப்பு மக்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே சொந்த ஊர் திரும்பிய அவலமும் நடந்தேறியது.

அந்தச் சமயத்தில் பல திரை நட்சத்திரங்கள் முன்வந்து, அப்படி சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்தனர். அதில் முக்கியமானவர் நடிகர் சோனு சூட். மும்பை மாநிலத்திலிருந்து பல தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் சோனு, "கடந்த மூன்றரை மாதங்கள் என் வாழ்வை மாற்றும் அனுபவமாக இருந்தன. புலம்பெயர்ந்து வந்தவர்களுடன் தினமும் 16-18 மணி நேரம் செலவிட்டேன். அவர்களின் வலிகளைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் வீடு திரும்ப வழியனுப்பி வைக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பொங்கும். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, ஆனந்தக் கண்ணீரைப் பார்த்தது எனது வாழ்வின் விசேஷமான அனுபவமாக இருந்தது. கடைசி புலம்பெயர் தொழிலாளி வீடு திரும்பும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதி எடுத்தேன்.

இதற்காகத்தான் நான் இந்த நகரத்துக்கு வந்ததாக நம்புகிறேன். இதுதான் என் வாழ்வின் நோக்கம். புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ என்னை ஒரு ஊக்கியாகப் பயன்படுத்திய இறைவனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். மும்பையை நான் மனதார நேசிக்கிறேன்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, என்னில் ஒரு பகுதி உபி, பிஹார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கிராமப்புறங்களில் வாழ்கிறது என்று நினைக்கிறேன். அங்கு எனக்கு புது நண்பர்களும், ஆழமான நட்பும் கிடைத்துள்ளன. இந்த அனுபவங்களை, என் ஆன்மாவில் கரைந்துள்ள கதைகளைப் புத்தக வடிவில் எழுத முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

பென்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE