கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரட்டலா சிவா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்

பிரபாஸ் நடித்த 'மிர்ச்சி' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கொரட்டலா சிவா. அதற்குப் பிறகு 'ஸ்ரீமந்துடு', 'ஜனதா கரேஜ்', 'பரத் அனே நேனு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அனைத்துப் படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஊரடங்கில் 'ஆச்சார்யா' படத்தின் இறுதிகட்டப் பணிகளைக் கவனித்து வருகிறார்.

இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயக்குநர் கொரட்டலா சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது தனது ட்விட்டர் பதிவில் கொரட்டலா சிவா கூறியிருப்பதாவது:

"வைரஸை விட, வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் அதை ஒரு ரகசியமாக வைத்திருப்பது இன்னும் பயங்கரமான அனுபவமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து பொறுப்புடன் நடந்துகொள்வோம்.

நமக்கு நெருங்கியவர்களிடமும், சமீபத்தில் சந்தித்த அனைவரிடமும் விஷயத்தைச் சொன்னால் அவர்களும் தங்களைப் பரிசோதித்துக் கொள்வார்கள். இதுதான் இந்த நேரத்தில் முக்கியம். இது அதிக நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டிய நேரம்".

இவ்வாறு கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE