பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வாரிசு நடிகர்களின் பக்கத்திற்கே சென்று நெட்டிசன்கள் பலர் அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் பல நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் உடனான நினைவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏக்தா கபூர். அதோடு சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் சுஷி! ஒரு வால் நட்சத்திரத்தை பார்த்ததும், அது நீங்கள்தான் என்று தெரியும்போது நாங்கள் புன்னகை செய்து பிரார்த்திப்போம். உங்களை என்றென்றும் நாங்கள் நேசிப்போம்.
இவ்வாறு ஏக்தா கபூர் கூறியுள்ளார்.
சுஷாந்த் மறைவு தொடர்பாக பிறகு பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர் சல்மான் கான், ஏக்தா கபூர் ஆகியோரின் மீது பீஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.