அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள 'புஷ்பா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பல்வேறு மொழிகளின் இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். 'அலா வைகுந்தபுரம்லோ' படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் 'புஷ்பா'.

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்தப் படத்திலிருந்து தற்போது விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இந்த அச்சுறுத்தல் முடிந்தவுடன் பல்வேறு படங்களை முடிக்க வேண்டியதிருப்பதால், 'புஷ்பா' படத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாது என்று இயக்குநர் சுகுமாரிடம் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE