9 இயக்குநர்கள் யார்? - மணிரத்னத்துக்காக களமிறங்கும் முன்னணி நடிகர்கள்

மணிரத்னம் தயாரிக்கவுள்ள வெப் சீரிஸில் உள்ள 9 குறும்படங்களை, எந்த 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கி வந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40% படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் திட்டமிட்டபடி நடிகர்களின் தேதிகள் கிடைக்கப் பெற்று படப்பிடிப்புத் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார். இதற்கு 'நவரசா' என்று இப்போதைக்குத் தலைப்பிட்டுள்ளனர். இதுவே அதிகாரபூர்வ தலைப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த 9 கதைகளையும் ஒன்றிணைத்து வெப் சீரிஸாகத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். மணிரத்னம், ஜெயந்திரா, கே.வி.ஆனந்த், சுதா, சித்தார்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர்தான் இந்த 9 கதைகளை இயக்கவுள்ளனர். இதன் மூலம் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் இருவருமே இயக்குநர்களாக அறிமுகமாகவுள்ளனர்.

இதில் '180' படத்தின் இயக்குநர் ஜெயந்திரா இயக்கவுள்ள படத்தில் சூர்யாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிஜாய் நம்பியார் படத்தில் விஜய் சேதுபதியும், சுதா கொங்கரா படத்தில் ஜி.வி.பிரகாஷும் நடிக்கவுள்ளனர். இதர இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ளவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த வெப் சீரிஸ் மூலமாக வரும் பணத்தைத் தொழிலாளர்களின் நலனுக்காகக் கொடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக மணிரத்னம் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE