'இந்தியன் 2' படப்பிடிப்பில் நிறைய கற்றேன்: ரகுல் ப்ரீத் சிங்

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நிறைய கற்றேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களைக் கடந்து நடந்து வந்தது. இறுதியாக படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த பிரச்சினைகள், கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. ஆனால், இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிகட்டப் பணிகளைப் படக்குழு தொடங்கிவிட்டது.

இந்தப் படத்தில் நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள்.

'இந்தியன் 2' படப்பிடிப்பு அனுபவங்கள் தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

" 'இந்தியன் 2' படத்தில் நடித்த அனுபவம் மிகச் சிறப்பானதாக இருந்தது. என் தொழில் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக ஷங்கர், கமல் போன்ற அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு துறையில் திறம்படச் செயல்படுபவர்கள் உங்களைச் சுற்றி இருக்கும்போது நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் விதம், ஒரு காட்சியை அணுகும் விதம், அதற்குத் தரும் அழகு என, எழுத்து வடிவில் இருக்கும்போது ஒரு விஷயம் இருக்கும். அதுவே படப்பிடிப்பில் மெருகேற்றப்பட்டு வேறொரு விஷயமாக மாறும்.

என் கற்றல் தன்னிச்சையாக நடந்தது. ஒரு நடிகையாக என்னைப் பற்றியும், எனது தொழில் பற்றியும் நிறைய கற்றேன். நீங்கள் பணியாற்றும் நபர்களின் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதே அளவு அந்தத் திறன் உங்களுக்கும் ஒட்டும். உங்கள் கலையை மெருகேற்றும்".

இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE