வெப் சீரிஸில் நடிக்கும் சரத்குமார்

By செய்திப்பிரிவு

சரத்குமார் நடிப்பில் 'Birds of Prey - The Hunt Begins' என்ற புதிய வெப் சீரிஸ் ஒன்று தயாராகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவர் சரத்குமார். நடிகர், வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், தயாரிப்பாளர், நடிகர் சங்கத் தலைவர் எனத் திரையுலகில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர். சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி அரசியலில் தீவிரமானாலும், திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று (ஜூலை 14) சரத்குமாரின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவர் நடித்து வரும் படங்களிலிருந்து பிரத்யேக போஸ்டர்கள், பாடல் என வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது ராதிகா சரத்குமார் 'Bird of Prey - The Hunt Begins' என்ற போஸ்டரை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன், "இந்த நல்ல நாளில் உங்களை ஓடிடி உலகத்துக்கு வரவேற்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் சரத்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஓடிடி தளத்தில் சரத்குமார் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இதை யார் இயக்குகிறார்கள், யாரெல்லாம் சரத்குமாருடன் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே ராதிகா சரத்குமார் வெளியிடவில்லை.

மேலும், இந்த வெப் சீரிஸ் அர்ச்சனா என்பவர் எழுதிய 'Birds of Prey' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE