காதல் பூத்த தருணம்: நஸ்ரியா குறித்து மனம் திறந்த ஃபகத் பாசில்

By செய்திப்பிரிவு

நஸ்ரியா உடனான காதல் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஃபகத் பாசில்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நஸ்ரியா. அதோடு ஃபகத் பாசிலின் தயாரிப்பு நிறுவனத்தையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதனிடையே ஃபகத் பாசில் - நஸ்ரியா இருவருக்கும் எப்படிக் காதல் உருவானது என்பது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாயின. தற்போது நஸ்ரியா மீதான காதல் குறித்துப் பேசியுள்ளார் ஃபகத் பாசில்.

அதில் ஃபகத் பாசில் கூறியிருப்பதாவது:

" 'பெங்களூர் டேஸ்' படப்பிடிப்பின்போது இது நடந்தது. ஃபகத் பாசில் என்பவரைச் சந்திப்பதில் பெரிய ஆர்வம் காட்டாத ஒரு பெண்ணைப் பார்ப்பது எனக்குப் புதிதாக இருந்தது. அவரது கவனத்தைப் பெற நான் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் அவரைக் காதலிக்க வைத்தது என நினைக்கிறேன்.

நான் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்தவுடன் செய்யும் முதல் காரியம், அவர் என்னைக் கவனிக்கிறாரா என்பதுதான். எனவே முதல் முயற்சியை நான் செய்தேன். ஆனால், அவர்தான் என்னிடம், 'வெளியே செல்லலாமா' என்று கேட்டார். ஏனென்றால் அவரைக் கேட்கும் தைரியம் எனக்கில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இந்தத் துறைக்கு வந்ததும் நான் செய்த இரண்டு நல்ல விஷயங்கள், ஒரு நடிகையைத் திருமணம் செய்து கொண்டதும், தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதும்தான். திரைப்படம் தொடர்பான எனது எல்லா உரையாடல்களிலும் நஸ்ரியா இருப்பார். இத்தனைக்கும், திலீஷ் மற்றும் ஷ்யாம் புஷ்கரனோடு என்னை விட நஸ்ரியாதான் அதிகமாக உரையாடுவார்".

இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE