டிக் டாக் தடையை வைத்து உருவான 'டாக்டர்' பாடல்

டிக் டாக் தடையை வைத்து 'டாக்டர்' படத்தில் பாடலொன்றை உருவாக்கியுள்ளது படக்குழு.

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'அயலான்' மற்றும் 'டாக்டர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் முதலில் 'டாக்டர்' படம்தான் திரைக்கு வரவுள்ளது. 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இதன் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதனிடையே ஜூலை 16-ம் தேதி 'டாக்டர்' படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளது படக்குழு. இதன் அறிவிப்பை காமெடி தொனியில் பிரத்யேக வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இதில் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் உரையாடியுள்ளனர்.

டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாட்டு செய்துவிடலாம் என்று காமெடியாக அனிருத்திடம் சிவகார்த்திகேயன் கேட்பார். அதனைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள் முடிந்தவுடன் பாடலின் சின்ன பகுதியையும் இணைந்துள்ளனர். "இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேனுமா.. நேரா டூயட் பாட வாயேன்மா" என்று பாடல் தொடங்குகிறது. 'செல்லம்மா' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

அந்த வீடியோவைக் காண:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE