’துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்: அக்‌ஷரா கவுடா

By செய்திப்பிரிவு

‘துப்பாக்கி’ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துப்பாக்கி'. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் அக்‌ஷரா கவுடா சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கரோனா ஊரடங்கு சமயத்தில் அளித்த நேரலைப் பேட்டியில், 'துப்பாக்கி' படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று அக்‌ஷரா கவுடா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' படம் தொடர்பாக அக்‌ஷரா கவுடா பேட்டியில் கூறியிருப்பதாவது:

" 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அதற்கு சந்தோஷ் சிவன் சார்தான் ஒளிப்பதிவாளர். அந்தச் சமயத்தில் இந்தியில் 'நாடோடிகள்' ரீமேக் படப்பிடிப்பும் இருந்தது. அதற்கும் சந்தோஷ் சிவன்தான் ஒளிப்பதிவாளர். அப்போதுதான் 'துப்பாக்கி' காட்சி குறித்து தெரிவித்து 2 மணி நேரம்தான் படப்பிடிப்பு என்று நடிக்க அழைத்தார் சந்தோஷ் சிவன்.

மொழி தெரியாது. ஆனாலும் நடித்துக் கொடுத்தேன். விஜய் - காஜல் அகர்வால் ஆகியோருடன் நடிக்கும் போதெல்லாம், அவர்கள் இவ்வளவு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும், விஜய் சார்- ஏ.ஆர்.முருகதாஸ் சார் - சந்தோஷ் சிவன் சார் ஆகியோருக்காக மட்டுமே நடித்தேன். அதைத் தாண்டி அப்படி என்ன பெரிய கதாபாத்திரத்தில் நான் நடித்துவிட்டேன். அதில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். யாருடன் நடித்தேன் என்பதைச் சொல்லவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் சொல்கிறேன்".

இவ்வாறு அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE