’’நாடகம், சினிமா, டிவி; இருந்திருந்தால் ஓடிடியிலும் வந்திருப்பார் பாலசந்தர் சார்’’ - நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி

By வி. ராம்ஜி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகர் பிரசன்னா வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரசன்னா கூறியிருப்பதாவது:

90வது பிறந்தநாளில் பாலசந்தர் சார் நம்முடன் இருந்திருக்கலாம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சந்தோஷமாக இருந்திருக்கும். அவர் நம்முடன் இல்லையென்றாலும் அவர் பற்றி நாம் பேசுவதற்கும் அவருடைய படங்களைப் பற்றி நினைப்பதற்கும் அவருடைய படங்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கும் ஏகப்பட்ட விஷயங்களை நமக்காக, பொக்கிஷம் மாதிரி நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார் பாலசந்தர் சார்.

எனக்கு அவருடைய படங்களில் மிகவும் பிடித்த படம் ‘உன்னால் முடியும் தம்பி’.எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய படம். அதில் வரும் ‘உதயமூர்த்தி’ மாதிரி வாழ்க்கையில் இருக்கவேண்டும் என்று மிகப்பெரிய கனவு எனக்கு உண்டு. அதேபோல் எனக்கு பிடித்த பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி’தான். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலையை, அன்றைக்கே சொல்லியிருக்கிறார் என்றே சொல்லலாம். அப்படி இல்லையா... அன்றிலிருந்து இன்று வரைக்கும் எதுவுமே மாறவில்லை என்றும் சொல்லலாம்.

பாலசந்தர் மாதிரியான ‘போல்டான’ டைரக்டரைப் பார்ப்பது ரொம்பக் கஷ்டம். கலைப்படம் மாதிரியும் கொடுத்திருக்கிறார். கமர்ஷியல் படங்களையும் கொடுத்திருக்கிறார். இப்படி பல விதமான படங்களைக் கொடுத்து சக்ஸஸ்ஃபுல் இயக்குநராகவும் இருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
நாடகம், சினிமா, டெலிவிஷன் என்று பல துறைகளுக்குள்ளேயும் சாதனை நிகழ்த்தினார். இன்றைக்கு இருந்திருந்தால், ஓ.டி.டி. பிளாட்பார்மிலும் புதிது புதிதாக படைப்புகளைக் கொடுத்திருப்பார். அவருடைய படங்களையும் அவருடைய நினைவுகளையும் கொண்டாடுவோம். பாலசந்தர் சார் எங்கிருந்தாலும் நம்மை வாழ்த்துவார். ஆசீர்வதிப்பார்.

இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE