நடிகர் அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று: குடும்பத்தினருக்கு ஸ்வாப் பரிசோதனை

By பிடிஐ

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப்பச்சன் (வயது 77), அபிஷேக் பச்சன் (வயது 44) இருவருக்கும் லேசான கரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எனக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனது குடும்பத்தார் மற்றும் அலுவலர்களுக்கும் பரிசோதனை நடந்துள்ளது. முடிவுக்காகக் காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இன்று எனது தந்தைக்கும் எனக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து அதிகாரிகளுக்கும் எங்களுக்குக் கரோனா வைரஸ் இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மும்பை மாநகராட்சி நிர்வாகம் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் தனித்தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அமிதாப், அபிஷேக் இருவருக்கும் ரேபிட் ஆன்ட்டிபாடி பரிசோதனை நடந்ததில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இருவருக்கும் லேசான கரோனா அறிகுறிகள் உள்ளன. காய்ச்சல், இருமல் இருவருக்கும் இருக்கிறது.

அமிதாப் பச்சன் ஏற்கெனவே நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுத்துவருவதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் நலமாக இருக்கின்றனர். விரைவில் இருவரும் நலம் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் ஸ்வாப் பரிசோதனை நடந்துள்ளது. முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இன்று முடிவுகள் வெளியாகும் என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE