சுஷாந்த் நடித்த 'தில் பெச்சாரா' ட்ரெய்லர் வெளியீடு: ஒரே நாளில் 2.2 கோடி பார்வைகள் கடந்து சாதனை

By செய்திப்பிரிவு

கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மே 8-ம் தேதி வெளியாகவிருந்த அவரது 'தில் பெச்சாரா' படம் பற்றிய உரையாடல்களும் ஒரு பக்கம் நடந்தன.

ஊரடங்கால் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் ஜூலை 24 அன்று நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, சினிமாவின் மீது சுஷாந்துக்கு இருந்த காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஹாட் ஸ்டாருக்கு சந்தா கட்டாதவர்களும் அவர் கடைசியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை இலவசமாகப் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (06.07.2020) 'தில் பெச்சாரா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் ட்ரெய்லர் கவுண்ட் டவுன் பக்கத்துக்கும் சென்று காலை முதலே பின்னூட்டங்களை இடத் தொடங்கிவிட்டனர்.

நேற்று மாலை 4 மணிக்கு 'தில் பெச்சாரா' ட்ரெய்லர் வெளியானது ஒரு சில மணிநேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளைப் பெற்றது. வெளியாகி இன்னும் 24 மணி நேரம் முழுமையடையாத நிலையில் தற்போது 2.2 கோடி முறை இந்த ட்ரெய்லர் பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்த ட்ரெய்லரை 50 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துக்குக் கிடைத்த லைக்குகளை விட அதிகம்.

முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சுஷாந்த், சஞ்சனா சங்கி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தக் கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE