'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி

'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சசிகுமார் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்பிரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'சுப்பிரமணியபுரம்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அனுராக் காஷ்யப் கைப்பற்றினார். ஆனால், இன்னும் இந்தப் படத்தின் ரீமேக் உருவாகவில்லை. இதனிடையே, இந்தப் படம் இன்றுடன் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காகப் பலரும் சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பதிவில் சசிகுமார் கூறியிருப்பதாவது:

"எப்படி இந்த நாளை மறப்பேன்? ஜூலை 4. 12 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி புரொடக்‌ஷன்ஸின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தங்கள் முதல் தயாரிப்பின் முடிவைத் தெரிந்துகொள்வதற்காகப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தது. 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் எங்கள் வாழ்க்கையையே மாற்றிய ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்போம்".

இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE