சமூக வலைதளங்கள் மக்களைப் பிரிக்கின்றன: ஆலியா பட் 

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி, ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களை தங்கள் அகாடமியில் சேர்க்கும் பொருட்டு, சர்வதேச அளவில் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நபர்களுக்கு அழைப்புகளை அனுப்பும். இந்த வருடம் மொத்தம் 819 கலைஞர்களுக்கு இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தனக்கு அழைப்பு விடுத்ததற்காக ஆஸ்கர் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''புதிய உறுப்பினராக எனக்கு அழைப்பு விடுப்பு ஆஸ்கர் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை கவுரவமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.

இந்திய சினிமாவின் குரல் உலக அரங்கில் சரியான இடத்தைப் பிடித்துள்ளதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து அதிகமான நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அகாடமியால் அழைக்கப்படுவதால், இந்திய சினிமா உலகம் முழுவதுமுள்ள மக்களின் இல்லங்களிலும் இதயங்களிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

சினிமா என்பது தண்ணீரைப் போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு நிறமோ, இனமோ, இடமோ கிடையாது. எல்லா இடங்களுக்கும் அது சுதந்திரமாகச் செல்லும். உறுதியில்லாத, பிரிந்து கிடக்கும் இந்த உலகில் மக்களை ஒன்று சேர்க்க உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் அவர்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களே நம்மை இணைக்கும் சக்தியாக உள்ளது''.

இவ்வாறு ஆலியா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE