பாலிவுட்டில் பழம்பெரும் நடன இயக்குநராக வலம் வந்த சரோஜ் கான் இன்று (ஜூன் 3) அதிகாலை மாரடைப்பால் காலமானார். 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற பல்வேறு புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் சரோஜ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார்.
சரோஜ் கானின் மறைவு பாலிவுட் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரோஜ் கான் மறைவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
என்னுடைய அன்பு எப்போதும் இருக்கும், சரோஜ் ஜி. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். சினிமா துறையில் எங்கள் நடன குருவாக போற்றப்பட்ட, மதிப்பிக்குரிய நீங்கள் உண்மையில் ஓர் ஆளுமை. உங்கள் வழிகாட்டுதலின் கீழ் நடனமாடிய நினைவுகள் ஒரு மிகச்சிறந்த கவுரவம். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. உங்கள் குடும்பத்தினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.
ஐஸ்வர்யா ராய் நடித்த ‘தேவ்தாஸ்’, ‘தாளம்’, ‘குரு’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு சரோஜ் கான் நடனப் பயிற்சியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.