எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் ஷங்கர் ராஜா

By செய்திப்பிரிவு

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் யுவன். அதில் அவர் தன்னை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் பின்னணி இசை குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள யுவன், “வலிமை படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கரோனா அச்சுறுத்தலால், அனைத்தும் தாமதமாகி விட்டது” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் குறித்த இன்னொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த யுவன், “அவர் எனக்கு பலவழிகளில் ஊக்கமளித்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

மேலும், ரசிகர் ஒருவர், ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன? நீங்கள் அதை எப்படி கடந்தீர்கள்?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்ததுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE