அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி

By செய்திப்பிரிவு

அட்லியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'பிகில்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் ஷாரூக் கான் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே, 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் அட்லி. அதற்குப் பிறகு நீண்ட நாட்களாகப் படங்கள் தயாரிக்காமல் இருந்தவர், தற்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். முதலில் 'அந்தகாரம்' என்ற படத்தினை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து அட்லி தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

அட்லி - ஜெயம் ரவி இருவரும் சந்தித்தபோது, தனது உதவியாளரிடம் இருக்கும் கதை குறித்து ஜெயம் ரவியிடம் தெரிவித்துள்ளார் அட்லி. அப்போது கண்டிப்பாகக் கேட்பதாக உறுதியளித்திருக்கிறார் ஜெயம் ரவி. அந்தக் கதை ஜெயம் ரவிக்குப் பிடிக்கும்பட்சத்தில், அதனை அட்லியே தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE