தொலைக்காட்சி ஒளிபரப்பில் விஜய் படங்கள் தொடர்ச்சியாக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
கரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே இல்லாததால், பொதுமக்களுக்கு தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது. அதிலும் சின்னத்திரை படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பழைய வெற்றியடைந்த சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது.
சுமார் 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தொலைக்காட்சி நிறுவனங்களோ டிஆர்பியில் எப்போதுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என்று போட்டியிட்டது. அதன்படி, தங்களிடம் உள்ள படங்களை வைத்து காலை, மதியம், இரவு என தொடர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறது.
இதில் விஜய் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் இந்த கரோனா ஊரடங்கில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள். மக்கள் மத்தியில் விஜய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
மேலும், ஜூன் 20 - ஜூன் 26 தேசி வரையிலான அதிகப்படியான பார்க்கப்பட்ட பட்டியலை BARC நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் நடித்த 'ஜில்லா' படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தப் படத்துக்கு 10138 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த படத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படம் உள்ளது. இதற்கு 8295 புள்ளிகள் கிடைத்துள்ளது.
'ஜில்லா' கொஞ்சம் பழைய படமென்றாலும், தற்போது வெளியான 'பேட்ட' படத்தை அதிகம் பேர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'மாஸ்டர்' திட்டமிட்டப்படி வெளியாகவில்லை என்றாலும், தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் விஜய் படங்கள் சாதனை செய்து வருவதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.