'சூர்யவன்ஷி' இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹர் விலகலா? - தயாரிப்பு தரப்பு விளக்கம்

By ஐஏஎன்எஸ்

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யவன்ஷி' படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹர் விலகவில்லை என்று தயாரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.

புதன்கிழமை அன்று, 'சூர்யவன்ஷி' படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அதிலிருந்து விலகிவிட்டதாகவும், இதுவரை படத்துக்காக அவர்கள் செலவழித்த பணம் திரும்பித் தரப்பட்டதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. ஆனால் படத்தின் பிரதான தயாரிப்பாளர்களான ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், இந்தச் செய்தி தவறானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் 'சூர்யவன்ஷி'. 'சிம்பா', 'சிங்கம்' உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கதாபாத்திரங்களின் உலகத்தில் சூர்யவன்ஷி கதாபாத்திரமும் இருப்பது போல, தனியாக ஒரு சினிமா உலகத்தை இயக்குநர் ரோஹித் ஷெட்டி இந்தப் படம் மூலம் உருவாக்கியுள்ளார்.

இதற்கான முன்னோட்டம் ரன்வீர் சிங் நடித்த 'சிம்பா' படத்திலேயே கொடுக்கப்பட்டது. மேலும் 'சூர்யவன்ஷி' படத்தில் 'சிங்கம்' மற்றும் 'சிம்பா' கதாபாத்திரங்கள் கவுரவத் தோற்றத்தில் தோன்றவுள்ளனர்.

கத்ரீனா கைஃப் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப் வில்லனாக நடிக்கிறார். கரோனா நெருக்கடிக்கு நடுவில், இந்தப் படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE