நடிகை சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கு: மோசடிக்காக மீண்டும் கைதாகும் 'போக்கிரி' ஒளிப்பதிவாளர் 

நடிகை சாய் சுதாவை ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, தற்போது கையெழுத்து மோசடிக்காக ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்

'அர்ஜுன் ரெட்டி', 'எவடே சுப்ரமணியம்' உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாய் சுதா. 'போக்கிரி', 'சூப்பர், தேசமுதுரு', 'டிக்டேடர்' உள்ளிட்ட எண்ணற்ற சூப்பர்ஹிட் தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஷ்யாம் கே நாயுடு.

கடந்த சில வருடங்களாக தன்னைக் காதலித்து, வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி வந்த ஷ்யாம் இப்போது ஏமாற்றிவிட்டார் என நடிகை சாய் சுதா கடந்த மே மாதம் போலீஸ் புகார் அளித்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஷ்யாம், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் சாய் சுதாவுக்கும், ஷ்யாமுக்கு இடையே தெலுங்கு திரையுலகப் பிரபலம் ஒருவர் சமரசம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டது. ஜாமீன் குறித்த நீதிமன்ற விசாரணையின் போது, ஷ்யாம் தரப்பிலிருந்து சாய் சுதாவுடன் சமரசம் செய்துவிட்டதாகவும், சாய் சுதாவின் கையெழுத்திட்ட ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது தனது கையெழுத்தில்லை என சாய் சுதா தற்போது கூறியுள்ளார்.

நீதிமன்றத்தை நாடியுள்ள சாய் சுதா, மோசடி செய்தே ஜாமீன் பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். எனவே ஷ்யாம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து அவரைக் கைது செய்யும்படி நாம்பள்ளி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE