வாழ்த்துச் சொல்ல வராதீர்கள்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்

பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வராதீர்கள் என்று இயக்குநர் எஸ்.ஏ.சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரிடம் தான் உதவி இயக்குநராக ஷங்கர் பணிபுரிந்தார். 'சட்டம் ஒரு இருட்டறை', 'நான் சிகப்பு மனிதன்', 'நீதிக்கு தண்டனை', 'நாளைய தீர்ப்பு', 'செந்தூரபாண்டி' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். மேலும், மகன் விஜய் நாயகனாக அறிமுகமான போது அவரை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

இறுதியாக ஜெய், அதுல்யா, வைபவி உள்ளிட்ட பலர் நடித்த 'கேப்மாரி' படத்தை இயக்கியிருந்தார். தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, இவருக்கு நாளை (ஜூலை 2) பிறந்த நாளாகும். அதனை முன்னிட்டு யாரும் தன்னைக் காண வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாளுக்கு வந்து வாழ்த்துவீர்கள், சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால், இந்த வருஷம் ஒரு கண்ணுக்கு தெரியாத விரோதி, ஒரு வைரஸ் உலகத்தையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கிறது. யாரும் உண்மையான சந்தோஷத்தில் இப்போது இல்லை. ஒரு பயம் கலந்த நிலைமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே யாருமே இந்த ஆண்டு என்னைப் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் ரொம்ப முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள். கவனமாக இருங்கள்"

இவ்வாறு எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE