சத்தியமா விடவே கூடாது: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ரஜினி ஆவேசம்

சத்தியமா விடவே கூடாது என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ரஜினி ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி அமைதியாகவே இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.

இதனிடையே, சாத்தான்குளம் காவல்துறையினரின் செயல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

"தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாகக் கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடவே கூடாது".

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுடன் தான் கோபமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE