க்றிஸ்டோபர் நோலனின் நாற்காலி ரகசியம் - ஆன் ஹாத்வே பகிர்வு

By ஐஏஎன்எஸ்

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநராக இருப்பவர் க்றிஸ்டோபர் நோலன். இவரது ‘மெமெண்டோ’, ‘ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’, ‘டார்க் நைட்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை.

இந்நிலையில் க்றிஸ்டோபர் நோலனின் ‘ப்ரஸ்டீஜ்’ மற்றும் ‘டார்க் நைட் ரைஸஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆன் ஹாத்வே. நோலனின் திரைப்படங்கள் குறித்தும், அவரது படமாக்கல் முறை குறித்தும் பல்வேறு தகவல்களை ஒரு பேட்டியில் ஆன் ஹாத்வே பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

‘நான் இயக்குநர்களின் நடிகை. சிறந்த இயக்குநர்களின் படங்களின் நடிப்பதும் அவர்கள் வேலை செய்வதை பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். அவற்றில் க்றிஸ்டோபர் நோலனின் படமாக்கல் முறை என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அவை மிகவும் நுணுக்கமாக இருந்தாலும் அவரது படங்கள் மிக பிரம்மாண்டமானதாக இருக்கும். அவர் எப்போதும் ஊக்கமளிக்கும் ஒருவராக இருப்பார்.

அவர் தனது படப்பிடிப்புத் தளங்களில் நாற்காலிகளை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நாற்காலிகள் இருந்தால் மக்கள் அதில் உட்காருவார்கள், உட்கார்ந்தால் வேலை நடக்காது என்று காரணம் கூறுவார். அவருடைய படங்கள் தொழிநுட்ப ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும், அபாரமானவை. அவைசரியான நேரத்தில் குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிக்கப்படும். அதற்கு இந்த நாற்காலி ரகசியமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஆன் ஹாத்வே கூறினார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE