கோவிட்-19 தொற்று பற்றிய திரைப்படம்: ஆஸ்கர் வென்ற கதாசிரியர் இயக்குகிறார்

By பிடிஐ

சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கரோனா கிருமி தொற்றின் ஆரம்ப நிலை குறித்த ஒரு திரைப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற கதாசிரியர் சார்லஸ் ராண்டால்ஃப் எழுதி, இயக்கி, தயாரிக்கவுள்ளார். எஸ்.கே க்ளோபல் என்ற தயாரிப்பு நிறுவனம், ராண்டால்ஃபுடன் இணைந்து நிதியளித்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

ஒரு அற்புதமான மருத்துவக் குழு, சர்வதேச அளவில் தொற்றாக மாறவுள்ள ஒரு மர்மமான கிருமியை எதிர்கொள்ளும் ஒருசில வாரங்களை இந்தப் படம் பேசும் என்று கூறப்பட்டுள்ளது.

"இதைச் சரியாக எடுக்க எஸ்கே க்ளோபல் தரப்பில் உள்ள அனைவருடனும் பணியாற்றுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் எவ்வளவு ஆழம் போகிறோமோ அவ்வளவு அடர்த்தியாக வூஹானின் கதை மாறுகிறது. பெரிய அரக்கனுடன் சண்டையிடுவது ஒரு ரகம். இருட்டில், பெரிய அரக்கனுடன் சண்டையிடுவது இன்னொரு ரகம்" என்று ராண்டால்ஃப் கூறியுள்ளார்.

ராண்டால்ஃப், 'தி பிக் ஷார்ட்' திரைப்படத்துக்கு இணை கதாசிரியராகப் பணியாற்றினார். இந்தப் படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கரை வென்றது. சமீபத்தில் 'பாம்ப்ஷெல்' என்ற திரைப்படத்துக்கும் கதாசிரியராகப் பணியாற்றியிருந்தார். கோவிட்-19 பற்றிய படம் இவரது இயக்கத்தில் முதல் முயற்சி.

இந்தப் படம் பற்றிப் பேசியுள்ள எஸ்கே க்ளோபல் தரப்பு, "நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான, ஆச்சரியமூட்டும் விஷயத்துக்குள் சார்லஸ் ராண்டால்ஃப் நம்மை அழைத்துச் செல்வார். அவரது விரிவான கதை சொல்லும் முறை இந்தக் கதை வர்ணனையின் உயிராக உள்ளது. அவரது முதல் இயக்கத்தையும், அவரது பார்வையையும் ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி"என்று கூறியுள்ளது.

சீனா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளில் இந்தத் திரைப்படம் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE