'அண்ணாத்த' படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
'தர்பார்' படத்துக்குப் பிறகு, சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ரஜினி. தற்போது கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 45% படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது.
குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். முதலில் அக்டோபர் மாத வெளியீடு என்று திட்டமிட்டனர். ஆனால் கரோனா அச்சுறுத்தலால் இப்போது 2021 பொங்கல் வெளியீடு என்று அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.
ஆனால், பொங்கல் வெளியீடும் சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால் கரோனா முழுமையாக இல்லாமல் போனவுடன்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சிகிச்சை எல்லாம் முடிந்து, இப்போது பழைய நிலைக்கு திரும்பிவிட்டதால் படப்பிடிப்பின் மூலம் தனது உடல்நிலைக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
அதுமட்டுமன்றி, 'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது யாருக்காவது கரோனா வந்துவிட்டால் கூட பெரிய சர்ச்சையாகிவிடும் என்பதால்தான் இந்த முடிவை ரஜினி எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். இதனால் கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிந்து, படப்பிடிப்பு தொடங்கி, அனைத்துப் பணிகளும் முடியத் தாமதமாகும் என்பதால் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
அதேபோல், 'அண்ணாத்த' படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டவை. இனி வரும் காட்சிகள் அனைத்தையும் சென்னையிலேயே படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.