ஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப்

By செய்திப்பிரிவு

நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்', ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. 'வால்டர்' மற்றும் 'அசுரகுரு' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' வெளியானது.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள 'டேனி' மற்றும் 'காக்டெய்ல்' ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக 'லாக்கப்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'லாக்கப்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE