மகனுக்கு வில்லனாகும் விக்ரம்?

By செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 'கோப்ரா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளனர். அப்பா - மகன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால், இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 'இருமுகன்' படத்தில் விக்ரம் வில்லனாக நடித்திருந்தார். அதில் நாயகன் - வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மகனுக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி தொடர்பாக படக்குழுவினர் இதுவரை எந்தவொரு மறுப்புமே தெரிவிக்கவில்லை. லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE