சுஷ்மிதா சென்னுக்கு ட்விட்டரில் வாழ்த்து- நெட்டிசன்களின் கேலிக்கு ஆளான சல்மான் கான்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

மேலும், கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்தன.

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் பலரையும் திட்டித் தீர்த்து வருகிறார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்

இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென் நடிக்கும் புதிய தொடருக்காக சல்மான் கான் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடியுள்ளனர்.

சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய தொடர் ‘ஆர்யா’. இது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த தொடருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில ஒரு பதிவை வெளியிட்டார், அதில் தனது ‘வான்டட்’ படத்தின் வசனம் ஒன்றை குறிப்பிட்டு சுஷ்மிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்,

இந்த பதிவில் நெட்டிசன்கள் பலர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்தும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் சர்ச்சை குறித்தும் கேள்விகளை எழுப்பி சல்மான் கானை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். ‘எம்.எஸ். தோனி’, 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE