சுஷாந்தின் திருமண திட்டங்கள், நிலவில் வாங்கிய இடம்: தந்தை கேகே சிங் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திருமண திட்டங்கள் குறித்துப் பேசியுள்ள அவரது தந்தை கேகே சிங், அடுத்த வருடம் பிப்ரவரி - மார்ச் மாதத்தில் அதற்காக சுஷாந்த் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டைத் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த சம்பவம். சுஷாந்த் இறந்த நாள் முதல், இன்று வரை, அவரைப்பற்றிய பல்வேறு நேர்மறை செய்திகள், பகிர்வுகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது சுஷாந்தின் தந்தை கேகே சிங், சுஷாந்துக்கு இருந்த திருமண திட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

''நாங்கள் அது குறித்து பேசினோம். கரோனா தொற்று சமயத்தில் சாத்தியமில்லை என்று சுஷாந்த் கூறினார். மேலும் தனது படம் வெளியாகவுள்ளது என்றும் சொன்னார். அதனால் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் திட்டமிடலாம் என்றிருந்தார். இதுதான் நான் அவனிடம் கடைசியாகப் பேசிய விஷயம்.

நிலவு மீது சுஷாந்துக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அவன் நிலவில் சிறிய அளவு இடமும் வாங்கியிருந்தான். அதை தனது ரூ.55 லட்சம் மதிப்புள்ள தொலைநோக்கியின் மூலம் பார்த்துக்கொண்டே இருப்பான்'' என்று கேகே சிங் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா, தங்களின் குடும்பத்தை மும்பை மற்றும் பாட்னா என இரண்டு இடங்களிலும் சந்தித்து ஆறுதல் கூறியதாக சிங் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் நினைவாக ஒரு பிரார்த்தனைக் கூட்டம், பாட்னாவில் அவரது இல்லத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE