'அறம் 2'வில் நடிப்பது யார்? - இயக்குநர் கோபி நயினார் பதில்

By செய்திப்பிரிவு

நயன்தாரா இல்லாமல் 'அறம் 2' உருவாகாது என்று இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'அறம்'. கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படத்தில் சுனு லட்சுமி, கிட்டி, வேல ராமமூர்த்தி, ராமதாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நயன்தாராவுடன் நடித்திருந்தார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஜிப்ரான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்ட ஒரு குழந்தையைக் காப்பாற்ற நடக்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை. பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு கோபி நயினார் இயக்கத்தில் அடுத்ததாக எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் 'அறம் 2' குறித்துத் தகவல் வெளியானது. இதில் சமந்தா அல்லது கீர்த்தி சுரேஷ் இருவரில் ஒருவரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை இருவருமே மறுத்தார்கள்.

இதனிடையே, 'அறம் 2' குறித்து கோபி நயினார் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், ''நயன்தாரா இல்லாமல் 'அறம் 2' உருவாகாது. அவரைத் தவிர்த்து வேறு யாருடனும் அந்தப் படம் உருவாகாது. வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திதான்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE