'அயலான்' படம் தொடர்பாக வெளியான செய்திக்கு, ரகுல் ப்ரீத் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதில் க்ளைமாக்ஸ் காட்சிகளை சுமார் 15 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடத்தி முடித்தது படக்குழு.
ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது. தற்போது இந்தப் படத்தின் உரிமை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருக்கிறது.
இதனிடையே, 'அயலான்' படக்குழுவினர் மீண்டும் படப்பிடிப்புக்காக ரகுல் ப்ரீத் சிங்கிடம் தேதிகள் கேட்டதாகவும், அவர் இப்போதைக்கு வர இயலாது என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் படக்குழுவினர் ரகுல் ப்ரீத் சிங் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு ரகுல் ப்ரீத் சிங், "எப்போது நமக்குப் பொறுப்புள்ள பத்திரிகைகள் கிடைக்கும். எப்போது ஊடகங்கள் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளத் தொடங்கும். சில கூடுதல் ஹிட்களுக்காக மிகவும் கீழாக இறங்குகிறார்கள். யார் இப்போது முதலில் படப்பிடிப்பு தொடங்குகிறார்கள் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் செய்தி தொடர்பாக 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் பணிபுரிந்ததில் ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஈடுபாடு கொண்ட ஒருவர். ஆனால், ஊடகங்கள் வதந்திகளுக்கு இரையாகி, இது போன்ற தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு குழுவாக நாங்கள் முழு நம்பிக்கையுடன் அவரோடு மீண்டும் பணிபுரியவும், நிலைமை சீரானதும் படப்பிடிப்பை நிறைவு செய்யவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்".
இவ்வாறு இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரவிக்குமாரின் இந்தப் பதிவுக்கு ரகுல் ப்ரீத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.