உருவாகிறது 'தலைநகரம் 2': ஒப்புக்கொள்வாரா வடிவேலு?

By செய்திப்பிரிவு

'தலைநகரம்' படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ்ட் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி மிகவும் பிரபலம்.

நானும் ரவுடிதான்யா என்ற வடிவேலுவின் காமெடி இந்தப் படத்துக்குப் பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. தினமும் காமெடி தொலைக்காட்சிகளில் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாமல் முழுமையடையாது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி மிகவும் பிரபலம்.

தற்போது அமீர் நடிக்கும் 'நாற்காலி' படத்தை இயக்கி வருகிறார் வி.இசட்.துரை. அடுத்ததாக சுந்தர்.சி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் 'தலைநகரம் 2' என்ற பெயரில் உருவாகவுள்ளது. சுந்தர்.சி - வி.இசட்.துரை கூட்டணி இந்தப் படத்துக்கு முன்னதாக 'இருட்டு' என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது.

'தலைநகரம் 2' படத்தில் சுந்தர்.சியுடன் வடிவேலுவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொள்வாரா என்பதுதான் அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கவுள்ள 'தலைவன் இருக்கின்றான்' படத்துக்குப் பிறகு, இதுவரை வேறு எந்தவொரு படத்தையும் வடிவேலு ஒப்புக் கொள்ளவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE