கரோனாவிலிருந்து மீண்ட சமந்தாவின் தோழி: நடிகர் நாகார்ஜுனா பாராட்டு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இப்போது அதிலிருந்து மீண்டு குணமாகியுள்ள நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியை, நடிகர் நாகார்ஜுனா பாராட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று, ஷில்பா ரெட்டி, அவருக்கும், அவர் கணவருக்கும் கரோனா தொற்று இருந்தது என்றும், இரண்டு வாரங்களாக வீட்டுத் தனிமையில் சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் பகிர்ந்திருந்தார். மேலும், தொற்று காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியுடன் எப்படி ஒருவர் இதைத் தாண்டி வரலாம் என்ற ஆலோசனையையும் வழங்கியிருந்தார்.

நடிகை சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனா, ஷில்பாவைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"உலகில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் வேளையில், ஆரோக்கியமான மனதுடன், உடலுடன் இருப்பதே சரியான தீர்வாகத் தெரிகிறது. எங்கள் அன்பார்ந்த நண்பர் ஷில்பா ரெட்டியும் அவரது கணவரும் இந்த தொற்றை அனுபவித்து, அதிலிருந்து அற்புதமாக மீண்டு வந்துள்ளனர். அவரது அனுபவத்தைத் தருகிறது. ஊக்கமூட்டுகிறது!" என்று ஷில்பாவின் காணொலியைப் பகிர்ந்து நாகார்ஜுனா பாராட்டியுள்ளார்.

முன்னதாக, துணிச்சலுடன் இந்த விஷயத்தைப் பற்றி வெளியில் சொல்லி, தங்களைப் பெருமை கொள்ளச் செய்துவிட்டார் என நடிகை சமந்தாவும் தோழி ஷில்பாவைப் பாராட்டிப் பகிர்ந்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE