'பெண்களை மையப்படுத்திய' என்ற வார்த்தைகளே பிடிக்காது: நடிகை மஞ்சிமா மோகன்

By செய்திப்பிரிவு

பெண்களை மையப்படுத்திய என்ற வார்த்தைகளே தனக்குப் பிடிக்காது என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' என இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தி இந்து ஆங்கிலம் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"திரையரங்கில் கிடைக்கும் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது. விஜய்யின் புதிய படத்தை ஸ்ட்ரீமிங்கில் பார்க்க முடியாது என்பதைப் போல. முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் படம் பார்ப்பது என்பது தனித்துவமானது. ஆனால் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' ஆகிய படங்கள், முதல், பெரிய அடியை எடுத்து வைத்துள்ளன.

ஆனால் பெண்களை மையப்படுத்திய படம் என்ற வார்த்தைகளே எனக்குப் பிடிக்காது. நாயகன் இருந்தாலும் கூட ஒரு நடிகையால் ஒரு படத்தைத் தாங்க முடியும். உதாரணத்துக்கு, 'நானும் ரவுடிதான்' படம், நயன்தாரா இல்லாமல் முழுமையடையாது. அதே போல 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில், த்ரிஷா. கதை அவரைப் பற்றியதுதான்.

பெண் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு படம் பெண்களை மையப்படுத்திய படமாக ஆகிவிடாது என நான் நம்புகிறேன். ஆண் பெண் என இரண்டு நடிகர்களுக்குமே சரி அளவு முக்கியத்துவம் இருந்தால் அது பெண்களை மையப்படுத்திய படம் என்று சொல்லும் அளவுக்கு (பெண் கதாபாத்திரங்களுக்கு) சிறப்பாகவே இருக்கும்"

இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE