நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல்: கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் கைது

By ஐஏஎன்எஸ்

பணம் கேட்டு நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘கந்தகோட்டை’, ‘துரோகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் தற்போது கேரள மாவட்டம் கொச்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர் பூர்ணாவுக்கு செல்போனில் அறிமுகமாகியுள்ளார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது.

சில நாட்களுக்குப் பிறகு, அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் சென்றதும் ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்த பூர்ணாவின் பெற்றோர், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, அதில் அவர்கள் பூர்ணாவின் வீடு, கார், வீட்டில் வெளிப்புறப் பகுதி ஆகியவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்து பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE