நம்மை ஒரு நடிகராக மதிக்கமாட்டார்கள் - வித்யா ப்ரதீப் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

மேலும், கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்தன.

இந்நிலையில் யாருடைய உதவியும் இன்றி சினிமாவில் அறிமுகமான பலரும் தான் பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

‘தடம்’ படத்தில் அறிமுகமான வித்யா ப்ரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தடம் திரைப்படத்துக்கு முன்பு நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 படங்களிலிருந்து மிகவும் நியாயமற்ற காரணங்களுக்காக விலக்கப்பட்டேன். என் மனம் மிகவும் வலித்தது. அதன்பிறகு இது நமக்கான படம் இல்லை என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு என் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

ஒருநாள் நள்ளிரவு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அடுத்த நாள் ஒரு ஆடிஷனுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அலுவலகம் சென்றேன். அன்று இயக்குநர் மகிழ் திருமேனியை சந்தித்தேன். கடந்த சில மாதங்களாகவே ஆடிஷன் நடைபெற்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். முதலில் அவர்கள் என்னை உறுதி செய்யவில்லை. ஆனாலும் மகிழ் திருமேனியிடம் பேசியதை வைத்து எனக்குள் ஒரு நேர்மறை எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது, அதன் பிறகு இப்படத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

ஒவ்வொரு காட்சி படமாக்கப்பட்ட பின்னரும் மகிழ் ‘நீ ஒரு மாயாஜாலம்’ என்று கூறி என்னை ஊக்கப்படுத்துவார். ஒரு நடிகரிடம் அன்புடனும் மரியாதையுடனும் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். திரையுலகம் குறித்த எனது நம்பிக்கையை தடம் மீண்டும் விதைத்தது. இங்க திறமையை மட்டுமே வைத்துக் கொண்டும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஊட்டியது. ஆனால் பரிந்துரையோ ஆசான்களோ இல்லாத என்னை போன்ற நடிகர்களை எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். வழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஒதுக்கப்படலாம், ஒடுக்கப்படலாம் அல்லது உங்களை ஒரு நடிகராக மதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு வித்யா ப்ரதீப் கூறியுள்ளார்.

வித்யா ப்ரதீப் ‘தலைவி’ ‘அசுரகுலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்,

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE