கண்ணதாசன் பிறந்த நாளுக்கு கமல் வெளியிட்டுள்ள கவிதை

மறைந்த கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கமல் கவிதையொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கண்ணதாசன். அவர் மறைந்துவிட்டாலும், ஜூன் 24-ம் தேதியன்று அவருடைய பிறந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் பலரும் அவருடைய பாடல்கள், கவிதைகள் ஆகியவற்றில் உள்ள கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள்.

தற்போது கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன். அது பின்வருமாறு:

அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.

இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.

நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.

இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!

கிட்டா அடிகளை
கடைமடை சேர்க்கும்
இவ்வற்புத நதிக்கு
ஏது பிறந்த நாள்?

இன்றும்,
என்றும்
ஓடும்
நதி நீர்.

என்
அடுத்த வரியின்
அழியா
உயிர் நீர்.

இந்த கவிதை ஆடியோ வடிவில் பேசியும், அவருடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE