கரோனா ஊரடங்கில் காதலியைக் கரம்பிடித்த அஸ்வின்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் நடிகர் அஸ்வின், தனது காதலி வித்யாஸ்ரீயைத் திருமணம் செய்துகொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு காமெடி நடிகர் அஸ்வின் தனது திருமணம் ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி, இன்று (ஜூன் 24) காலை சென்னையில் அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரின் திருமணம் நடந்தது. இதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணம் தமிழக அரசு விதித்துள்ள கரோனா வழிமுறைகளைப் பின்பற்றியே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன்தான் நடிகர் அஸ்வின். இவர் 'கும்கி' படத்தின் மூலம் அறிமுகமானதால், திரையுலகில் அனைவருமே 'கும்கி' அஸ்வின் என்றே அழைத்து வந்தனர்.

'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஈட்டி', 'ஜாக்பாட்', 'கணிதன்' உள்ளிட்ட பல படங்களில் அஸ்வின் நடித்துள்ளார். இவர் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் வித்யாஸ்ரீயைக் காதலித்து வந்தார். இவர் அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் பெற்றவர்.

அஸ்வின் - வித்யாஸ்ரீ காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தத் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அஸ்வின் - வித்யாஸ்ரீ தம்பதியினருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE