அருண் விஜய்யின் அறிவிப்பு: சிக்கலில் 'பாக்ஸர்' படம்

By செய்திப்பிரிவு

'பாக்ஸர்' படம் குறித்து அருண் விஜய்யின் கடிதத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது.

'அக்னிச் சிறகுகள்', 'சினம்', அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். இந்தப் படங்களுக்கு முன்பாக படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட படம் 'பாக்ஸர்'. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் கதைக்காக வெளிநாட்டுக்குச் சென்று தற்காப்புக் கலைகள் எல்லாம் கற்று உடலமைப்பை முழுமையாக மாற்றினார் அருண் விஜய். மேலும், 'பாக்ஸர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் அருண் விஜய். 'பாக்ஸர்' படம் தொடர்பாக "தயாரிப்பு தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு வேண்டும். அந்தப் படம் தொடங்கப்பட்டால் சரியாக ஷூட்டிங் போய் முடிக்க வேண்டும். அதற்காகத் தயாரிப்பு நிறுவனம் தயாரானால் அந்தப் படம் தொடங்கப்படும்" என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

'பாக்ஸர்' படம் குறித்து எந்தவொரு தகவலுமே தெரியாத சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி 'பாக்ஸர்' குறித்த முக்கியமான அப்டேட் வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தினார்கள். இது சமூக வலைதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்று பலரும் நம்பினார்கள். ஆனால், இன்று (ஜூன் 24) காலை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் 'பாக்ஸர்' படம் குறித்து என்னிடம் உங்களில் பலர் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக என்னைத் தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். ஆனால், இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிக முயற்சியும் உழைப்பும் இப்படத்துக்குத் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி"

இவ்வாறு அருண் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் மூலம் 'பாக்ஸர்' படத்தில் சிக்கல் உருவாகியுள்ளது தெளிவாகிறது. இன்று (ஜூன் 24) மாலை 5 மணியளவில் ஹேமா ருக்மணி 'பாக்ஸர்' குறித்த அப்டேட்டை வெளியிடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால், அருண் விஜய்யின் கடிதத்தின் மூலம் அவர் படக்குழுவினரின் மீது கடும் கோபத்தில் இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE