சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை: பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்துள்ளனர்.

ஜூன் 14-ம் தேதி அன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், பக்கம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் பற்றிய சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளது. அதே நேரம், சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சுஷாந்த் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று செவ்வாய்க்கிழமை அன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கும் காங்கிரஸ் தரப்பிலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிஹார் இளைஞர் காங்கிரஸ் அணித் தலைவரும், திரைப்படத் தணிக்கை ஆலோசனைக் குழு உறுப்பினருமான லாலன் குமார் அமித் ஷாவுக்கும், தாக்ரேவுக்கும் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்

ஊடக செய்திகளை மேற்கோள் காட்டியுள்ள குமார், சுஷாந்த் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும், சிபிஐ விசாரணை மட்டுமே ஒட்டு மொத்தக் குழப்பத்தைத் தீர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 15 நாட்களில் தனது கோரிக்கை நிறைவேறவில்லையென்றால் அதன் பின் நீதிமன்றம் செல்வேன் என்றும், சுஷாந்துக்கு நியாயம் கிடைக்கும் வரை சல்மான் கான், கரண் ஜோஹர் படங்கள் பிஹாரில் திரையிடப்படாது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆளுநருமான நிகில் குமார், பாஜக தலைவரும், நடிகருமான மனோஜ் திவாரி ஆகியோரும் சுஷாந்த் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE